Mon, Jun 29, 2026 01:55 PM

மாரணி உசிலங்குளம் கண் மாய்க்கு நீர்வரத்து ஏற்படுத்த விவசாயிகள் கோரிக்கை

Posted by Admin on 22-06-2026


மாரணி உசிலங்குளம் கண் மாய்க்கு நீர்வரத்து ஏற்படுத்த விவசாயிகள் கோரிக்கை

மாரணி உசிலங்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்படுத்த நடவடிக்கை தேவை; ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி அருகே உள்ள மாரணி உசிலங்குளம் பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் இருந்தாலும், போதிய நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இலுப்பக்குடி கிராமத்தில் உள்ள வெஞ்சா கண்மாய்க்கு உப்பாற்று மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது. ஆனால் அதே பகுதியில் உள்ள மாரணி உசிலங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லும் வசதி இல்லாததால், கண்மாய் நீரின்றி காணப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

வெஞ்சா கண்மாய் நிரம்பிய பிறகு அதிலுள்ள உபரி நீர் மீண்டும் உப்பாற்றுக்கே திரும்பிச் செல்கிறது. எனவே, அந்த உபரி நீரை கால்வாய் அமைத்து மாறணி உசிலங்குளம் கண்மாய்க்கு திருப்பி விடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதன்மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாறணி உசிலங்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், கண்மாய் பரப்பில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி நீர்நிலையை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்வரத்து வசதி ஏற்படுத்தப்பட்டு கண்மாய் முழுமையாக சீரமைக்கப்பட்டால், அப்பகுதியில் விவசாய உற்பத்தி அதிகரிப்பதுடன் நிலத்தடி நீர்மட்டமும் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share: 428 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.