Fri, Aug 28, 2026 10:01 AM

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்களின் நாட்டுக் கூட்டத்தில் ஆகஸ்ட் 19-ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

Posted by Admin on 10-08-2026


கல்குவாரிகளை மூட வலியுறுத்தி     38 கிராம மக்களின் நாட்டுக் கூட்டத்தில் ஆகஸ்ட் 19-ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்களின் நாட்டுக்கூட்டம்

ஆகஸ்ட் 19-ல் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலையில் புதிய கல்குவாரி மற்றும் கிரசர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே செயல்பட்டு வரும் அனைத்து கல்குவாரிகளையும் மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் ஒன்றுகூடி நாட்டுக்கூட்டம் நடத்தினர்.

வடவன்பட்டி மயில்ராயன்கோட்டை நாட்டுக்கோயில் மந்தையில் நடைபெற்ற இந்த நாட்டுக்கூட்டத்தில், 10 அம்பலங்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். அரச மரத்தடியில் வெற்றிலை, பாக்கு வைத்து பாரம்பரிய முறையில் நடைபெற்ற கூட்டத்தில், மல்லாக்கோட்டை நாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து கிரசர் மற்றும் கல்குவாரிகளையும் உடனடியாக மூட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மயில்ராயன்கோட்டை நாட்டுப் பகுதிகளை கனிமவளத் தோண்டுதல் நடைபெறக்கூடாத பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

கல்குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் குறைவு மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய கிராம மக்கள், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதி வடவன்பட்டி கிராமத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இந்த நாட்டுக்கூட்டம் மூலம் கல்குவாரி எதிர்ப்பு போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Share: 1,012 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.